திங்கள். ஜூன் 30th, 2025

Views: 455

மலர்கள் தலையில் சூடுவதற்கு மட்டுமல்ல, உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் கூட. ஆம், நம் அழகாக, அழகிற்காக, காதலின் அடையாளமாக, பெண்களின் கவர்ச்சியாக பார்க்கும் பல பூக்கள் சிறந்து மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளன. நமக்கு தெரிந்தவரை, வாழைப்பூ, முருங்கை பூ மட்டும் தான் உன்ன உகந்தது என எண்ணி வருகிறோம். ஆனால், பெண்கள் தலையில் சூடும் சில பூக்களும் கூட உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கின்றது..  பூ சூடுவது என்பது ஒரு பாரம்பரியமான பழக்கம். இதை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்து சென்று இருக்கிறார்கள். ஆரோக்கியமான பழக்கம் இது.தினமும் பூ பறிப்பது ஒரு நல்ல அனுபவம். பொறுமையானவர்கள் மட்டுமே பூ பறிக்க முடியும். அல்லது பூ பறிக்க கற்று கொள்வது பொறுமையை வளர்க்கும். பொறுமைக்கு பூமா தேவியை உதாரணமாக சொல்வர். பூவை பறிப்பவர்களிடத்தில் சில அனுபவங்கள் ஏற்படுவதுண்டு. பெண்கள் பூ சூடுவது பெண் தன்மையை மேம்படுத்தும். தலையில் பூ வைப்பது சில நன்மைகளை செய்கிறது. பூ வில் உள்ள மிக நுட்பமான பிராண ஆற்றல் மூளையால் கவரப்பட்டு நாளமில்லா மற்றும் நாளமுள்ள சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன. பூவின் பிராண ஆற்றல் மன அழுத்தத்தை குறைத்து இயல்பான தன்மையை வழங்குகிறது.  பெண்களுக்கு பூவையர் என்று ஒரு சொல் உள்ளது. பூவை போல  மலர்ந்த முகத்துடன் இருப்பவர்கள். தலையில் பூ வைப்பவர் மற்றும் வைக்காதவர் இருவரையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும். சினைமுட்டை  முதன் முதலில் வெளி வர துவங்குவதையே பெண் பெரியவளாகி விட்டாள் என்று கூறுகிறோம். அதாவது பூப்பெய்தி விட்டாள் என்று கூறுகிறோம். பெண்ணை பூவாக கருதுகிறோம். பெண்ணை பூவிற்கு ஒப்பிடுகிறோம்.

உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

பூக்களைச் சூடும் கால அளவு

முல்லைப்பூ – 18 மணி நேரம்

அல்லிப்பூ – 3 நாள்கள் வரை

தாழம்பூ – 5 நாள்கள் வரை

ரோஜாப்பூ – 2 நாள்கள் வரை

மல்லிகைப்பூ – அரை நாள்கள் வரை

செண்பகப்பூ – 15 நாள்கள் வரை

சந்தனப்பூ – 1 நாள்கள் மட்டும்

மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ – சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.

மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ – இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.

பூக்களின் பயன்கள்:

ரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மல்லிகைப்பூ – மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

செண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.

பாதிரிப்பூ – காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.

செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

மகிழம்பூ – தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.

வில்வப்பூ – சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.

சித்தகத்திப்பூ – தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

தாழம்பூ – நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.

தாமரைப்பூ – தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும்.
மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.

கனகாம்பரம்பூ – தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.

தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.

பூக்களைச் சூடும் முறை:

பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும். உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.

மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.

ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.

மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும்.

மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.

முல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம்.

உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.

திரி தோஷத்தை சமன்செய்யும் பூக்களை எப்போதும் சூட வேண்டும்.

குளிச்சியான காலத்தில் உஷ்ணமான பூக்களையும், உஷ்ணமான காலத்தில் குளிர்ச்சியான பூக்களையும் சூட வேண்டும்.

மழைக் காலத்தில் கேசத்துக்கும், கண்ணுக்கும் நன்மை தரும் பூக்களைச் சூட வேண்டும். பாதிரிப்பூ, மல்லிகைப்பூ சூடலாம்.

சூடப்படும் பூ தலையில் மட்டுமே இருக்கும்படி சூடவேண்டும். எப்போதும் தோள்பட்டையிலும் முதுகுப் பகுதியிலும் படாமல் இருக்குமாறு பூக்களைச் சூட வேண்டும்.

துளசி, மரிக்கொழுந்து மற்றும் செவ்வரளி போன்றவற்றை ஒன்றாகச் சேர்த்துச் சூடலாம். தலையில் உள்ள ஈறு பேன் போன்றவற்றை நீக்கும். கூந்தலுக்கு நல்ல மணத்தைக் கொடுக்கும்.

கனகாம்பரம் அல்லது ரோஜாவை மாலையாக நம் மார்பில் அணிவதால், இதயம் நலம் பெறும். உடல் முழுவதும் ஒருவித சிலிர்ப்பைத் தருவதோடு மகிழ்ச்சியை உண்டாக்கும்.

காகிதப்பூக்கள், பிளாஸ்டிக் பூக்களைத் தலையில் சூடக்கூடாது. ஒற்றை மலராக எந்த வகைப் பூவையும் வைக்கக் கூடாது.

பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:

பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.

இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.

தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும். ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.

மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது. பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது. மனமாற்றத்துக்கு உதவுகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

பூவின் சக்தி நம் உடலின் செல்களை உற்சாக படுத்தி அதன் இயல்பு தன்மையினை பெற உதவுகிறது .  இதனால் நாம் பாரம்பரிய குணாதிசயத்தை பெறுகிறோம். இன்று அதிகமானவர்களுக்கு மன அழுத்ததினால்  உடல் செல்கள் இறுகிப்போய்விடுகிறது. பூவைத்த பெண்ணை பார்க்கும் போது முழுமை நிறைந்த பெண்ணாக தோன்றுவாள். தங்க நகையை விட பூவிற்கு தான் அந்த சக்தி உண்டு. இன்று பூ வைக்கும் பழக்கம் பெண்களிடையே குறைந்து வருகிறது. பெண்மை தன்மை பெண் உணர்வுடன் தொய்வு இல்லாமல் எப்போதும் இணைந்து இருக்க வேண்டும். ஆண்களை விட பெண்களுக்கு E .S .P  சக்தி அதிகம் உள்ளது. இது பூக்கள் அணிவதால் மேம்படுகிறது.தனது முதுகுக்கு பின் யாரேனும் பார்த்தல் கூட கூருணர்வால் அறியும் சக்தி யை பூக்கள் தருகிறது. ஆனால் கூருணர்வு மரத்து விட்டால் மாராப்பை சரிசெய்ய கூட இயலாது. கூருணர்வு என்பது உடலை கடந்த உணர்வு. இது உடலுக்கு அப்பாலும் உடலுக்கு உள்ளும் இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

four × two =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.