Views: 128
திட்டமிடாத எந்த செயலும், வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. ஒரு வீடு கட்டும் போது என்னென்ன திட்டமிட்டு கட்டுகிறோம். அது போல ஒரு நகரம் உருவாகும் போதே, எதிர்காலத்தை மனதில் வைத்து திட்டமிட்டு உருவாக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவ., 8ம் தேதி “உலக நகர திட்டமிடல் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
திட்டமிட்ட நகரங்களுக்கும், திட்டமிடாதவற்றுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சுற்றுச்சூழல், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், பஸ், ரயில் நிலையங்கள், ஏர்போர்ட், விளையாட்டு மைதானங்கள் என அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். இது போன்ற நகரம் தான், திட்டமிட்ட நகரம் எனப்படுகிறது. ஏற்கனவே ஒரு நகரம், நன்றாக உருவாக்கப்பட்டிருந்தாலும், மக்கள் தொகை பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய விரிவாக்கம், சட்ட விதிகளை பின்பற்றாமை, வரைமுறையில்லாமல் கட்டடங்களை கட்டுவது, லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதியளிப்பது, ஆக்கிரமிப்பு போன்றவை, நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. மக்களும், நகர வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இந்தியாவில் முதன் முதலில் திட்டமிடப்பட்ட நகரம் என்ற பெருமையை சண்டிகர் பெற்றுள்ளது. இது பஞ்சாப் மற்றும் அரியானாவுக்கு பொது தலைநகர். உலகின் பெரிய திட்டமிடப்பட்ட நகரம் நவி மும்பை. இது 1972ம் ஆண்டு, மும்பை மாநகர் விரிவாக்கத் திட்டத்தின் படிஉருவாக்கப்பட்டது. நொய்டா, ஜெய்ப்பூர், காந்திநகர் உள்ளிட்டவையும் திட்டமிடப்பட்ட நகரங்கள்.