Views: 162
உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்.,16ம் தேதி, உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. “இடம்பெயர்வு எதிர்காலத்தை மாற்றவும். உணவு பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் முதலீடு செய்தல( Change the future of migration. Invest in food security and rural development)” என்பது, இந்தாண்டு மையக் கருத்து. ஒவ்வொருவருக்கும், போதுமான அளவு உணவு கிடைக்க வேண்டும். வசதி வாய்ப்பற்றோர், உடல் ஊனமுற்றோர், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா., சபை. இதை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
உலகில் 85 கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 82 கோடிப்பேர், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். ஆண்டுதோறும், பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் அதிகம். இதை பாதியாக குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டும், ஒவ்வொரு ஆண்டும் பட்டினி மரணங்கள் அதிகரிக்கின்றன.அனைவருக்கும் தேவையான உணவு இருந்தாலும், அதை பெறும் அளவு பணம் இல்லாததே மரணங்களுக்கு காரணம்.