Views: 92
உலக அஞ்சல் தினம் (World Post Day) அக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது. அக்டோபர் 9, 1874 இல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.
இன்றைக்கு இ-மெயில், எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப், என்று விரல் நுனியில் தகவல்கள் பகிரப்பட்டாலும், விரலால் கடிதம் எழுதி தபால் பெட்டிகளில் அனுப்பிய காலத்தை மறக்க முடியாது. ஸ்காட்லாந்தில் 1712-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தபால் நிலையம்தான் உலகின் மொத்த தபால் நிலையங்களுக்கும் தாய் வீடாகும். இன்றைக்கும் அந்த தபால் நிலையம் மக்கள் சேவையாற்றி வருகிறது. இன்றைக்கு உலகில் 8 லட்சத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள் உள்ளன. உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியாவுள்ளது, இந்திய அஞ்சல் துறை 1764ல் துவக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.