Views: 631
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.உஷ்ணத்தால் பித்த நோய்களும்,காற்றினால் வாத நோய்களும்,நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.
கடுக்காய் பழங்கால இலக்கியங்களில் வலி நிவாரணி எனப் பொருள்படும் அப்யதா என்கிற பெயரில் அழைக்கப்பட்டது. அறுசுவைகளில் உப்புச் சுவை தவிர பிற சுவைகள் இதில் அடங்கியுள்ளன.
கடுக்காய் மர வகையைச் சார்ந்தது. 25 மீட்டர்கள் வரை உயரமாக வளரக்கூடியது. பல ஆண்டுகள் வாழும். கடுக்காய் மரத்தின் இலைகள் பசுமையாகவும,; தனித்தும், 10 முதல் 20 செ.மீ. நீளத்திலும், நீள்வட்டமாகவும், கிளைகளின் முடிவில் எதிரெதிர் இணைகளாகவும் காணப்படும்.
கடுக்காய் பூக்கள், மங்கிய வெண்மை நிறமானவை, கிளைகளின் நுனியில் காணப்படும். கடுக்காய் முதிரா கனிகள் பசுமையானவை, முதிர்ந்த கனிகள் மஞ்சளானவை. கடுக்காய் கனிகள் 2-4 செ.மீ. நீளமானவை. பொதுவாக, 5 தெளிவற்ற கோடுகள் கனித்தோலில் காணப்படும்.
சமவெளியில் அரிதாக கடுக்காய் மரங்கள் வளர்கின்றன. மலைப்பகுதிகளில் பரவலாக வளர்கின்றன. மலைகளில் வளர்பவை பெரிய கனிகளுடன் காணப்படும். கடுக்காய் அதன் மருத்துவப் பயன்களுக்காகவும் சாயமேற்றுதல் பயன்களுக்காகவும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
வேறு பெயர்கள் : அமுதம், அம்ருதா, அரபி, அரிதகி, ரோகினி, வரிக்காய், ஜீவந்தி, அமரிதம்.
தாவரவியற் பெயர் :Terminalla Chebula
ஆங்கிலப் பெயர் : Chebulic Myrobalam, Ink nut
இது மரவகுப்பைச் சேர்ந்தது. இது சில இடங்களில் உயர்ந்தும், சில இடங்களில் மிக உயரமின்றித்தாழ்ந்தும் பயிராகின்றது. இதன் பிஞ்சும் பழமுமே மருத்துவத்தில் உபயோகமாகின்றன.
அபையன், அமுதம், ரோகிணி, ஜீவந்தி ஆகிய முக்கிய மாற்றுப் பெயர்களும் கடுக்காய்க்கு உண்டு. காய்ந்த கடுக்காய் மற்றும் கடுக்காய் சூரணம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சேலம் மாவட்டத்தில் விளையும் கடுக்காய் உலகத் தரம் வாய்ந்தது
ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். “பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.
கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.
நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?
சிறப்புத் தன்மைகள் :
கடுக்காய் சிறந்த மருத்துவத் தன்மையுடையதாகும். வடமொழியில் ‘மருத்துவரின் காதலி’எனப்படுகிறது. மருத்துவத்தில் மட்டுமின்றி பொருளாதா£ரம், தொழிலியல் துறைகளில்வெகுவாக பயன்படுகிறது. ‘திரிபலா’ என்பது சித்த மருத்துவத்தில் புகழ்பெற்ற ஒரு கூட்டுமருந்தாகும். இதில் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் என்ற மூன்றும் சேர்க்கப்படுகின்றன. கடுக்காய் என்பது ஒரு கடினமான மருந்து என்று நாம் கருதுகிறோம். ஆனால் கடுக்காயை நாட்டுமருந்துக் கடைகளில் எளிதாக வாங்கலாம். கடுக்காயின் தோலை மட்டுமே பயன்படுத்தவேண்டும். உள்ளிருக்கும் பருப்பைப் பயன்படுத்தக்கூடாது. இதன் ஓட்டைப் பொடியாக்கிவைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
பொருளாதாரப் பயன்கள்:
கடுக்காய் மரத்தழைகளை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.
கடுக்காய் மரத்திலிருந்து பிசின் எடுக்கலாம்.
மரப்பட்டை பொடியிலிருந்து மோல்டிங் மாவு தயாரிக்கப்படுகிறது.
பல்வேறு தொழில்களுக்கு ஒரு உப மூலப்பொருளாக விளங்கும் டானின் சத்து கடுக்காய்த்தோலிருந்து பெறப்படுகிறது.
தோல் பதனிட டானின் பயன்படுகிறது.
துணிகளுக்குச் சாயமேற்ற, சிமெண்ட் தயாரிப்பு, சிலேட் கற்களுக்கு நிறமூட்ட, நிலக்கரியைச்சுத்தம் செய்ய டானின் உதவுகிறது.
டானின் பிரித்தெடுத்த பின் எஞ்சும் கடுக்காய்ச் சக்கை அட்டைக் காகிதம் செய்யவும்,ஒட்டுப்பசை தயாரிக்கவும் பயனாகிறது.
முற்காலத்தில் கட்டடம், கோவில் கட்ட கடுக்காய்ச்சாறு சேர்க்கப்பட்டது.
கடுக்காய் கொட்டையிலிருந்து ஒருவகையான எண்ணெய் எடுக்கப்படுகிறது.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:
கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.
இதை பற்றி சித்தர் கூறும் பாடல்… “காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.- காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.
குடற்புழுக்களிற்கு
கடுக்காய்த் தோல், வேப்பிலை ஈர்க்கு, சமஅளவு எடுத்து அம்மியில் வைத்து மைபோன்றுஅரைத்து அதில் நெல்லிக்காய்ப் பிரமாணம் 1 தே. கரண்டி ஆமணக்கெண்ணெயில் கலந்துகாலையில் வெறும் வயிற்றில் 3 நாட்கள் தொடர்ந்து அருந்திவர குடலில் உள்ள புழுக்கள்வெளியேறி குடல் சுத்தம் அடையும்.
கரப்பான் நோய்க்கு (எக்ஸிமா)
கடுக்காய்த் தோலை சூரணித்து 1/2 தே.கரண்டி காலை, மாலை பாலுடன் உட்கொண்டுஅச்சூரணத்தையே வெந்நீரில் கலந்து உடலில் பூசி ஸ்நானம் செய்து வந்தால் குணமாகும்.
மலச்சிக்கலுக்கு
பச்சைக் கடுக்காயை கொட்டை நீக்கி இடித்து அதற்கு 1/5 பங்கு உப்பிட்டு, 15 நாள் சென்ற பின்பிசைந்து அதை சோற்றுடன் சேர்த்தவாறு தனித்தாவது புசிக்கின் மலம் கழியும்.
உடல் எடையைக் குறைக்க
கடுக்காய்த் தோல், தான்றித்தோல், நெல்லி வற்றல் சம எடை எடுத்து சுத்தம் செய்து இடித்துவஸ்திரகாயஞ் செய்து அதில் 1/2 தே. கரண்டி அளவு கொள்ளுக் குடிநீருடன் காலை, மாலை எனஇருவேளை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
தலைவலிக்கு
வேப்பம்பட்டை , கடுக்காய் (கொட்டை நீக்கியது), கோரைக்கிழங்கு, நிலவேம்பு சம எடை எடுத்துதட்டி ஒரு சட்டியில் போட்டு 400 மி.லீ. நீர் விட்டு பாதியாக சுண்டுமளவுக்கு காய்ச்சி ஒருநாளைக்கு 3 வேளை வீதம் தேன் கலந்து சாப்பிட தலைவலி குணமாகும்.
மூலத்திற்கு கடுக்காய் லேகியம்
கடுக்காய் 300 கிராம் எடுத்து இடித்து 8 பங்கு நீர்விட்டு எட்டிலொன்றாக வற்றக் காய்ச்சி வடித்தகசாயத்தில் 300 கிராம் சர்க்கரையைக் கரைத்துப் பாகு செய்து அதில் சிவதை இஞ்சி, மிளகு, ஓமம், வாய்விளங்கம், திப்பிலி வகைக்கு 30 கிராம் எடுத்து அரைத்துப் போட்டு பசு நெய் 1 படிவிட்டுக் கிண்டி லேகியஞ் செய்து வேளை ஒன்றுக்கு கொட்டைப் பாக்குப் பிரமாணம் உட்கொள்ளமூலநோயுடன் பசியின்மை, மலசலக்கட்டும் தீரும். கரப்பான் பதார்த்தம் நீக்க வேண்டும்.
கண் மறைப்பிற்கு (கட்காசம்)
கடுக்காய்த் தோலைத் தட்டி சூரணமாக்கி துணியில் முடித்து ஆமணக்கெண்ணெயில் இட்டுச்சூரிய ஒளியில் வைத்து கண்ணில் பிழியலாம்.
நீரிழிவு நோய்க்கு
கடுக்காய்த்தோல் 1 பங்கு, நெல்லி வற்றல் 1 பங்கு, கறிவேப்பிலை 1 பங்கு, சிறுகுறிஞ் சாஇலை1/2 பங்கு தனித்தனியாக பொடி செய்து ஒன்று கலந்து காலை, மாலை 1 தே. கரண்டிவெந்நீருடன் பருகலாம். ஆனால் இலங்கன இரத்தப் பரிசோதனையின் பின் வேண்டுமானால் 3 வேளையும் பருகலாம். பாவித்து நல்ல பலன் கிடைத்த ஒன்றாகும்.
இருமலிற்கு
கடுக்காய்த் தோல், திப்பிலி சம எடை எடுத்து இடித்து தூள் செய்து 2 கி. தூளை தேனில் சேர்த்துதினமும் 2 வேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் உங்கள் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷ மாகும். கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது. நாமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இந்த உடல் பெற்ற உபாயம் அறிவோம்.