Views: 35
பால் போலவே வான் மீதிலே…: சந்திரன் பௌர்ணமிநாளில் கூட சிறு களங்கத்துடன்தான் ஒளிதருவான். ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீனராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான். அந்த பூரண பௌர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது. களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களை கொடுக்கும். எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களைத் தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது.
குருவிற்கு சொந்த வீடாக அமைந்த மீனத்தில் சூரியன் பங்குனி மாதத்தில் சஞ்சரிப்பார். ‘உத்ரம்’ நட்சத்திரம் வரும்பொழுது பங்குனி உத்திரம் என்ற பார் போற்றும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு தங்கரதம் ஏறி வரும் முருகப்பெருமானை தரிசித்தால், மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். மன அமைதி கிடைக்கும்.
வருங்காலம் நலமடையவும் எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றலைப் பெறவும் திருமுருகன் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
ஒரு வீட்டை நிலை நிறுத்துவது மரத்தாலான உத்திரம் தான்.
இரண்டு தூண்களுக்கு இடையே உத்திரம் அமைப்பர். அதுதான் வீட்டைத் தாங்கிப் பிடித்துக் கொள்கிறது. அதே போல உத்திரத்தன்று முருகனை வழிபட்டால், தூண் போல நம்மை அவன் தாங்கிப் பிடித்துக் கொள்வான். துயரங்களை துரத்திவிட்டு துணையாக நம்முடன் அவன் இருப்பான்.
அன்றைய தினம் முருகப்பெருமானை, சர்க்கரையால் அபிஷேகம் செய்து சந்தோஷம் காணுங்கள். இளநீரால் அபிஷேகம் செய்து இனிய வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள். காவடி சுமந்தால் கவலைகள் குறையும். பால் அபிஷேகம் செய்தால் பார்போற்றும் வாழ்க்கை அமையும்.