Views: 34
இந்தியாவில் முன்னிலை வகிக்கும் வாட்ஸ்அப் விரைவில் கேஷ்லெஸ் எகானமி எனப்படும் பணமில்லா பரிவர்த்தனை செய்யும் சேவையை, தனது அப்ளிகேஷனில் அறிமுகப்படுத்தப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்தியப் பிரதமர் மோடி அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்தியாவில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனத் தொடக்கத்தில் சொல்லப்பட்டது. ஆனால் அதன்பின் பணமில்லா பரிவர்த்தனை முன்னிலைப் படுத்தப்பட்டது.
அதன்பின், பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள Bhim (Bharat Interface for Money) என்ற செயலியும் இந்திய அரசின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சோஷியல் மீடியா நிறுவனமான வாட்ஸ்அப் விரைவில் இந்த சேவையில் களமிறங்கப் போவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.
சமீபத்தில் ஒருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த வாட்ஸ்அப் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பிரையன் ஆக்டன், மத்திய தகவல் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்தியா மிக முக்கியமான நாடு. சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்அப் மூலமாகத் தங்கள் நண்பர்கள், குடும்பம் மற்றும் சமுதாயத்தோடு இணைந்திருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தக செயல்பாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் வாட்ஸ்அப் பங்களிக்கும்” எனத் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக தான் தனது அப்ளிகேஷன் மூலம் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.
UPI (Unified Payments Interface) எனப்படும் ஒரே இடத்தில் பணம் செலுத்தும் வகையில் வாட்ஸ்அப் தனது அப்ளிகேஷனில் மாறுதல் கொண்டுவர உள்ளதாகத் தெரிகிறது. மொபைல் அப்ளிகேஷன் மூலமாகப் பணம் அனுப்பும் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை இதற்காக அந்த நிறுவனம் பணியில் அமர்த்தி வருகிறது.
ஃப்ரீ சார்ஜ் நிறுவனமானது ‘Chat and Pay’ என்ற பெயரில் வாட்ஸ்அப் மூலமாக பணம் அனுப்பும் வசதியை ஏற்கெனவே அறிமுகப்படுத்தியிருந்தது. ஃப்ரீ சார்ஜ் அப்ளிகேஷனில் இருந்து பணம் அனுப்ப வேண்டியவரை வாட்ஸ்அப்பில் செலக்ட் செய்து அதன்பின் தொகையை என்டர் செய்வதன் மூலமே பணம் அனுப்ப முடியும். எளிதாகவும் விரைவிலும் பணம் அனுப்ப முடிவதால் இது யூசர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனமும் இதே போல பணமில்லா பரிவர்த்தனையில் களமிறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வசதியை வாட்ஸ்அப் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. ஆறு மாத காலத்துக்குள் இதை அந்நிறுவனம் செயல்படுத்தும் எனத் தெரிகிறது. மொபைல் எண்ணை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதால் வாட்ஸ்அப் மூலமாகப் பணம் அனுப்புவது எளிதானதும், பாதுகாப்பானதும் கூட! பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஆதார் எண் மூலம் பயனாளர்களை சரிபார்க்கவும் வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறதாம்.
வாட்ஸ்அப் பணமில்லா பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தும் பட்சத்தில், வங்கிக் கணக்கோடு இணைத்திருக்கும் மொபைல் எண்ணை வாட்ஸ்அப்பில் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். இதன் மூலமாக இனி தனிநபருக்கு நேரடியாகப் பணம் அனுப்ப முடியும்.