X

நலமுடன் வாழ அறிவோம் மூலிகை – தும்பை

இன்று நம்முடைய வாழ்வில் தெருவோரத்தில் வளர்ந்து இருக்கும் இரண்டு அடி செடியின் பயன்கள் பற்றி பார்ப்போம். இது ஒரு தகவல் பகிர்வு. அந்த செடியின் பெயர் "தும்பை".

Views: 105

வணக்கம்! நண்பர்களே, மன்னிக்கவும் சில பணிச்சுமை காரணமாக எழுத இயலவில்லை. இன்னும் மூன்று நாட்களில் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. நண்பர்கள் அனைவர்களுக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.


Paint each day with your heart’s desires. Shoot for the stars and let nothing hold you back. Hope you have a wonderful day and new year.

இன்று நம்முடைய வாழ்வில் தெருவோரத்தில் வளர்ந்து இருக்கும் இரண்டு அடி செடியின் பயன்கள் பற்றி பார்ப்போம். இது ஒரு தகவல் பகிர்வு. அந்த செடியின் பெயர் “தும்பை“.

இது சிறுதும்பை, பெருந்தும்பை ஆகிய வகைகள் உண்டு. ‘லாமியேசியே’ (Lamiaceae) எனும் வாசனைமிக்கக் குடும்பத்தைச் சார்ந்த தும்பையின் தாவரவியல் பெயர் ‘லுகாஸ் அஸ்பெரா’ (Leucas aspera). டிரைடெர்பினாய்ட்கள் (Triterpenoids), ஓலியோனோலிக் அமிலம் (Oleanolic acid), சைடோஸ்டிரால் (Sitosterol), லியுகாஸ்பெரோன்கள் (Leucasperones) போன்ற வேதிப் பொருட்கள் தும்பையில் குடியிருக்கின்றன.

இதன் செடியின் மருத்துவம் மட்டும் உணவாகவும் பயன் படுகிறது. அது எப்படியென இங்கு பார்ப்போம்.

பசுமையான தும்பை இலைகளை அவ்வப்போது சமையலில் சேர்த்துவர, சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் துன்பப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. இதன் இலைகள் மற்றும் பூக்களை உலர்த்தி வைத்துக்கொண்டு, தேனில் குழைத்துச் சாப்பிட, நாட்பட்ட இரைப்பு நோயின் தீவிரம் விரைவில் குறையும். நாவறட்சி ஏற்பட்டு, அதிக தாகம் இருக்கும்போது, தும்பையின் பூக்களை, தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது தேன் சேர்த்துப் பானமாகப் பருக, வறட்சி குறைந்து நா மலரும்.

பூச்சாறு ஐந்து துளியை உலர்ந்த பேரீச்சம் பழத்துடன் கலந்து சுவைக்க, உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைப்பதுடன், நுரையீரல் பாதையில் சிறைப்பட்டிருக்கும் கோழையும் வெளியேறும். தும்பைச் செடியை உலர்த்திச் சூரணமாக்கி, நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துப் பாலில் கலந்து சாப்பிட்டு வர, ரத்தச் சோகை குணமாகும்.

‘டிரைகோபைடான்’ பூஞ்சைக்கு எதிராகச் செயல்பட்டு அதன் பரவலைத் தடுக்கும் திறன் தும்பைக்கு இருப்பதாக ஆய்வுகள் பதிவு செய்கின்றன. தும்பை மற்றும் நொச்சி இலைகளைச் சேர்த்து புகை போட, கொசுக்கள் விலகுவதாகவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. புற்றுநோய் செல்களுக்கு எதிராகச் செயல்படும் தன்மையும் தும்பைக்கு உண்டு.

சீரற்ற மாதவிடாயை முறைப்படுத்த, தும்பை இலை மற்றும் உத்தாமணி இலையை அரைத்து, சுண்டை அளவு மருந்தாகப் பிரயோகிக்கும் வழக்கு முறை கிராமத்தில் பின்பற்றப்படுகிறது. தலைவலி, மூக்கில் சதை வளர்ச்சி, சைனஸைடிஸ், சளி தொந்தரவுகளுக்கு, இதன் இலைச் சாற்றை மூக்கில் பிழியும் நசிய மருத்துவ முறை சித்த மருத்துவத்தில் பிரசித்தி பெற்றது.

சருமத்தில் தோன்றும் எரிச்சல், சிரங்கு, சொறி போன்ற அறிகுறிகளுக்கு, தும்பை இலையை அரைத்து உடல் முழுவதும் பூசிய பின் குளிக்கலாம். தலைபாரம், சளி அவதிப்படுத்தும்போது, இதன் இலைகள் மற்றும் மலர்களைக் கசக்கி வெந்நீரிலிட்டு ஆவி பிடிக்கலாம்.

தும்பைச் சாறு ஒரு கரண்டி, சிறிது மிளகுத்தூள் மற்றும் தேன் சேர்த்துக் கொடுக்க, வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறும். தலைபாரத்துக்குத் தும்பைப் பூவைச் சாறு பிழிந்து, ஒரு மெல்லிய துணியில் நனைத்து நெற்றியில் பற்றுப் போடலாம். இதன் மலரை மென்று சாப்பிட, தொண்டைப் புண் குணமாகும்.

நண்பர்களே, எங்காவது இந்த இரண்டு அடி தும்பை செடியை பார்த்தீர்களால் எடுத்து பயன் பெறுக. வாழ்க வளமுடன்! நலமுடன்!.

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.