X

வரகு அரிசி

Views: 152

பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உட்கொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். வரகு அரிசி. சிறுதானியங்களில் முக்கியமானது வரகு. வரகு, கோதுமையை விட சிறந்தது. இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது. இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது. வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். இதன் விதை ஆயிரம் வருடம் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது.  இதன் வயது 5 மாதங்கள்.அனைத்து மண் வகைகளிலும் சிறப்பாக வளரும். குறிப்பாக, களர் மண்ணில்கூட விளையும் தன்மையுடையது. ஆடிப் பட்டம், வரகு சாகுபடிக்கு ஏற்றது. நான்காம் மாதத்தில் கதிர் பிடிக்க ஆரம்பித்து, ஐந்தாம் மாதத்தில் முற்றி அறுவடைக்கு வந்து விடும். ஒரு குத்துக்கு 15 முதல் 20 சிம்புகளும், சிம்புக்கு 5 முதல் 8 கதிர்களும், கதிருக்கு 150 முதல் 200 மணிகளும் இருக்கும். ஏக்கருக்கு சராசரியாக 15 மூட்டை (60 கிலோ) மகசூல் கிடைக்கும். தற்போது பொதுவாக சிறுதானியங்களின் மேல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதால், வரகின் பயன்பாடு மெல்ல கூடிக்கொண்டு வருகின்றது.

இதில் உள்ள நார்ச்சத்து, அரிசி, கோதுமையில் இருப்பதை விட அதிகம்.. வரகில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால் ,இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்களை கொண்டதாகவும் இருக்கிறது. வரகைக் கோவில் கும்பத்தில் வைத்து பத்திரப்படுத்துவதற்கு முக்கியமான காரணம் அதற்கு இடியைத் தாங்கும் தன்மை உள்ளது.

சமைக்கப்பட்ட 1 கப் வரகு அரிசியில்,

காப்பர் – 31 சதவீதம், பாஸ்பரஸ் – 25 சதவீதம், மாங்கனீஸ் – 24 சதவீதம், மக்னீசியம் – 19 சதவீதம், நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் மற்றும் பி விட்டமின்கள்  போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

வரகு, பூண்டு, பால் கஞ்சி தினமும் காலை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டி, உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம். நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது.  இது பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையைக் குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. வரகு, சர்க்கரை அளவைக் குறைக்கிறது. மூட்டுவலியைக் குறைக்கிறது.

மருத்துவ பயன்கள்
சர்க்கரை அளவை குறைக்கிறது.
மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.
கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.
மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது.

வரகு அரிசி உப்புமா
வரகுஅரிசி,வெங்காயம்,கேரட்,குடமிளகாய்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு பச்சைப் பட்டாணி,பச்சை மிளகாய்,கடுகு,உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு, எண்ணெய்,உப்பு தேவையான அளவு. ரவை உப்புமா செய்வது போலவே இதையும் செய்யலாம். (ஒன்றுக்கு இரண்டு என்று கூடுதலாக தண்ணீர் விட வேண்டும்) .

வரகு காய்கறி பிரியாணி

தேவையான பொருட்கள்:

வரகு அரிசி – 1 குவளை (150 கிராம்)
தண்ணீர் – 3 குவளை
கேரட் மற்றும் பட்டர் பீன்ஸ் – மொத்தம் 200 கிராம்
பீட்ரூட் – 2 தேக்கரண்டி
தக்காளி – 2 (நடுத்தர அளவு)
சிறிய / பெரிய வெங்காயம் – 1/2 குவளை
இஞ்சி, பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – 1/2 குவளை
புதினா இலை – 10
நல்லெண்ணை – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
இந்துப்பு – சுவைக்கேற்ப
பட்டை – 1 துண்டு (1 இன்ச் நீளமுள்ளது)
கிராம்பு – 3
பிரியாணி இலை – 2
கல்பாசி – 1 தேக்கரண்டி
பிரியாணி மசாலா பொடி – 1 தேக்கரண்டி

பிரியாணி மசாலா பொடி தயாரிக்கும் முறை:
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் மிக்ஸியில் இட்டு பொடி செய்து, காற்று புகாதவாறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி மூடி வைக்கவும். எந்த வகையான பிரியாணி தயாரிக்கும் பொழுதும், இந்தப் பொடியைத் தேவையான அளவு சேர்த்துக் கொண்டால், அது பிரியாணிக்கு அருமையான வாசனையைத் தரும்.

பட்டை – 10 கிராம்
கிராம்பு – 10 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்

செய்முறை:
சமைப்பதற்கு முன்னர் வரகை 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். தேவையான காய்கறிகளை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். அதேபோல் வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி, தனித்தனி பாத்திரங்களில் தயாராக வைக்கவும். இஞ்சி, பூண்டு விழுது அரைக்கவும். கொத்தமல்லி தழை, புதினா இவற்றை கழுவி பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். பிரியாணி மசாலா பொடி தயாரித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் கல்பாசி போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் கொத்தமல்லி தழை, புதினா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், முழு பச்சை மிளகாய் போட்டு அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அனைத்துக் காய்கறிகளையும் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும். பிறகு 1 தேக்கரண்டி பிரியாணி மசாலா பொடி போட்டு கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி காய்கறியை  மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும். குக்கரில் தண்ணீரை ஊற்றி, அது கொதிநிலைக்கு வந்ததும் வரகை போடவும். பின்னர் வாணலியில் உள்ள கலவை முழுவதையும் குக்கருக்கு மாற்றவும். தேவையான அளவு இந்துப்பு சேர்த்து குக்கரை மூடவும். முதல் விசில் வந்த பிறகு, தீயைக் குறைத்து 8 நிமிடங்கள் காத்திருந்து, அடுப்பை அணைக்கவும்.  குக்கர் ஆவி போன பின்பு, சாதத்தை ஒரு அகலமான தட்டில் கொட்டி பரப்பி விடவும். இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும். ஏதாவது ஒரு வகை ராய்தாவுடன் பரிமாறவும்.

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.