X

அறிவோம் முடக்கத்தான் கீரை

Views: 708

முடக்கத்தான் கீரை கொடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு ஏறு கொடி. வேலிகளில் தானாக படர்ந்து வளரக் கூடியது. இதன் தண்டுகள் கம்பி போன்று மெல்லியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இலைக் காம்பு நீண்டு இருக்கும். இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது. ஒவ்வொரு இலைக் காம்பும் மூன்று பிரிவாகப் பிரிந்து, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று இலைகள் வீதம் மொத்தம் ஒன்பது இலைகள் இருக்கும். அதாவது ஒவ்வொரு இலைக் காம்பும் ஒன்பது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும்.

கம்பி போன்ற காம்பின் நுனியில் வெண்ணிறப் பூக்களும் காய்களும் இருக்கும். அந்தக் காய்கள் மிருதுவான தோல்களால் முப்பட்டை வடிவமாக மூடிக்கொண்டும், பலூன் போன்று உப்பிக் கொண்டும் இருக்கும். அந்தக் காய்க்குள் மூன்று அறை உண்டு. ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு விதை வீதம் மூன்று அறைக்குள் மூன்று விதை இருக்கும். இந்த விதை நன்கு முற்றாத போது பச்சையாக உருண்டையாக இருக்கும். விதை நன்கு முற்றிக் காய்ந்தவுடன் உருண்டையாக, கறுப்பு நிறமாக இருக்கும். ஒவ்வொரு விதையிலும் வெண்மை நிற அடையாளம் ஒன்றிருக்கும். இந்த விதைகளே சிதறி முளைக்கிறது.

முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், குறிப்பாக எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும். இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது. குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும். கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.

இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும்.

இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.

பொதுவாக வயது ஆக ஆக மூட்டுவலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான்.
இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு. சாதாரணமாக காய்கறிச் சந்தையில் இந்தக் கீரையும் கிடைக்கும்.

இரண்டு கைப்பிடி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய முடக்கத்தான் கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும். தண்டு, இலை எல்லாவற்றையுமே பயன்படுத்தலாம். பூண்டு நான்கு பல், இஞ்சி சின்னத்துண்டு, சிறிய வெங்காயம் ஒன்று, மிளகு அரைத்தேக்கரண்டி, சீரகம் அரை தேக்கரண்டி. இவைகளை ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு வதக்கிஎடுக்கவேண்டும்.
பிறகு இரண்டு குவளை நீர் ஊற்றி நல்லா வேக வைக்கவேண்டும். கீரை நல்லா வெந்து அதன் சாரம் நீரில் இறங்கிய பிறகு வடிகட்டி எடுத்தால் முடக்கத்தான் சாறு தயார்.

மூட்டுகளில் தங்கிய எல்லா எதிரிகளும் கரைந்து இருந்த இடம் தெரியாமல் ஓடிடும். மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி சுண்ணாம்பு, பாஸ்பரம் படிவங்கள்தான் பாரிச வாயு எனும் கைகால் முடக்கு வாதம் ஆகும் இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.

முதுகு தண்டுவடம் தேய்மானம் இருப்பவர்கள், மாதவிலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், எல்லாவிதமான மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும்.

இந்த நோய்கள் வருவதற்கு முன்பே சாப்பிட்டால் வராமல் தடுக்கலாம். 40 வயது தொடங்கியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.

வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடமஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துவரவும் பின் முடி கொட்டுவது நின்று விடும் நரை விழுவதை தடுக்கும்.கருகருவென முடி வளர தொடங்கும்

இதனைச் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். அதிகமான பேதியினால் ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும்.

முடக்கத்தான் கீரை தோசை

2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து அத்துடன் இரண்டு கைப்பிடி கிரையையும் சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து தோசை போல் சுட்டு சாப்பிடலாம் இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.
இரண்டு கைப்பிடி கீரையை மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து சாதாரண தோசைமாவுடன் கலந்து தோசை சுட்டால் கசப்பு சிறிதும் தெரியாது. நல்ல காரமான சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

இந்த‌ கீரையில் தோசை செய்வ‌துதான் வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம். ப‌ச்சைக்கீரை சிறிது க‌ச‌க்கும். ஆனால் ச‌மைத்த‌ப்பின் அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது. முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்து பயன்படுத்தினால் சுவையாக இருக்கும். இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம். துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.

முடக்கத்தான் துவையல்

முடக்கத்தான் கீரை – ஒரு கட்டு ,புளி – சிறிது, உப்பு – தேவையான அளவு,வெல்லத் துருவல் – 3 தேக்கரண்டி,எண்ணெய் – 2 தேக்கரண்டி
வடகம் – ஒரு தேக்கரண்ட, பூண்டு – 10 பல்,  காய்ந்த மிளகாய் – 5,   இஞ்சி – சிறு துண்டு,   சீரகம் – அரை தேக்கரண்டி
மிளகு – அரை தேக்கரண்டி,    நல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி,   கடுகு, உளுந்து – ஒரு தேக்கரண்டி,    பெருங்காயப்பொடி – சிறிது

வாணலியில் எண்ணெய் ஊற்றி வடகம் (வடகம் இல்லையெனில் அதை தவிர்க்கவும்) பூண்டு, காய்ந்த‌ மிளகாய், இஞ்சி, சீரகம், மிளகு சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் சுத்தம் செய்த‌ முடக்கத்தான் கீரையை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் சிறிதளவு புளி, தேவைக்கேற்ப‌ உப்பு சேர்த்து ஆற‌ வைக்கவும்.
ஆறியதும் வெல்லத் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து அரைத்த‌ விழுது சேர்த்து பெருங்காய‌ பொடி சேர்த்து நன்கு கிளறவும். தேவைப்பட்டால் இடையிடையே எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் பிரியும் வரை நன்கு கிளறி இறக்கவும். சத்தான‌ முடக்கத்தான் கீரை துவையல் தயார். இதே முறையில் முடக்கத்தான் கீரைக்கு பதிலாக‌ கறிவேப்பிலை, தூதுவளை, வல்லாரை, புதினா எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம்.

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.