Views: 290
கற்பூரவல்லியின் இலைகளே மருத்துவத்தில் பயன்படுபவை.கற்பூரவல்லி இலையைக் கையால் தொட்டுத் தடவி, முகர்ந்தால் ஓமத்தின் மணம் தரும். இலையில் சுரக்கும் ஒருவிதமன ஆவியாகும் தன்மையுடைய நறுமண எண்ணெய் இந்த மனத்திற்குக் காரணமாகும்.
கற்பூரவல்லி வறண்ட சமவெளிகள், சரிவான நிலப்பகுதிகளில்,கொத்தான இலைத் தொகுப்புகளுடன் காணப்படும். பல்லாண்டுகள் உயிர் வாழ்பவை. இலைகள், மணமுள்ளவை, பசுமையானவை, தடிப்பானை சதைப்பற்றுடன் காணப்படும்.
கற்பூரவல்லி தண்டுகள் மெல்லியதாகவும், வளைந்தும், ஒடியும் தன்மையுடனும் இருக்கும். நீலநிறமான பூங்கொத்துகள் வாசனையுடன் காணப்படும்.
கற்பூரவல்லி இலைகள் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; வியர்வையை அதிகமாக்கும்; கோழையகற்றும்.
கற்பூரவல்லி காசநோய், கபக்கட்டு, அம்மைக் கொப்புளம் ஆகியவைகளைக் கட்டுப்படுத்தும்.குழந்தை மருத்துவத்திலும் கற்பூரவல்லி உயர்ந்த இடத்தை வகிக்கின்றது. மழைக்காலத்தில் ஏற்படும் ஜலதோஷத்தைத் தவிர்க்க, கற்பூரவல்லி இலையை பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.
வீட்டு வைத்தியத்தில் ஜலதோஷம், இருமல் நீங்க, இரண்டு கற்பூரவல்லி இலைகளை கழுவி, நசுக்கி சாறு பிழிந்து 1/2 தேக்கரண்டி தேனுடன் உண்டால் நிவாரணம் கிடைக்கும். ஒரு இலையை பறித்து கழுவி உணவு உண்பதற்கு முன் கடித்து மென்று சாப்பிட்டால் உணவு ஜீரணம் நன்றாக ஆகும்.
கற்பூரவல்லி இலைகளை தேங்காய், பருப்பு, மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து சட்னியாக செய்து சாப்பிடலாம். உடலின் சளி நீங்க இலைகளை அரைத்து நீர்கலந்து கொதிக்க வைத்து ஏலக்காய், கிராம்பு (சிறிதளவு) மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து 3 நாட்களுக்கு தினசரி 2 வேளை பருகி வரவும். இலைகளை பஜ்ஜி போல் கடலை மாவில் தோய்த்து செய்யலாம்.
தொன்றுதொட்டு கற்பூரவல்லி இலைகள் உணவு ஜீரணக்கவும், கபம், சளி ஜூரம் குறையவும், பசி பெருகவும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
சிறுநீரக நோய்கள், சிறுநீரக கற்கள் ஆஸ்துமா இவற்றுக்கும் நல்ல மருந்து.
சிறு பூச்சிக்கடிகள், ஒவ்வாமையால் தோலில் உண்டாகும் தடிப்புகள், எரிச்சல் இவற்றுக்கு இலைச்சாறு தடவப்படுகிறது.
சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
கற்பூரவல்லி இலைகளை கசக்கி சாறு பிழிந்து சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் குழப்பி நெற்றியில் பூச தலை வலி குணமாகும்.