X

அறிவோம் புடலங்காய்

Views: 109

கொடிவகையை சேர்ந்த புடலின் காய்கள் நீண்டு பச்சையாக தொங்கும். தமிழகமெங்கும் தோட்டங்களில் பயிரிடப்படுகிறது. இதில் கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்ப்புடல் என பலவகை உண்டு. கொத்துப்புடல், நாய்ப்புடல் குத்துச்செடியாக வளரும். பன்றிப்புடல் கொடியாக இருந்தாலும் புடலின் காயைப் போலன்றி நீளம் குறுகியதாயிருக்கும் பேய்புடல் மிகவும் கசப்புடையது, ஆதலால் இதை எவரும் சாப்பிடுவதில்லை. புடலை தொடர்ந்து பயன்படுத்தினால் சூட்டை குறைக்கும். நல்ல பசி உண்டாகும். வயிற்றுபொருமலை போக்கும். வயிற்று பூச்சியை நீக்கும். இதன் காய், வேர், இலை மருத்துவகுணமுடையது என்றாலும் நாம் பயன்படுத்துவது காயை மட்டும்தான்.

புடலங்காயை நமது முன்னோர்கள் நீண்டகாலமாக உணவாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதில் சிறப்பு என்ன தெரியுமா? புடல் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகின்றனர். புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும். விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். பிஞ்சுகாயை மட்டுமே பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக  செய்து தொடா்ந்து 12 நாட்கள் வீதம் முறை விட்டு 48 நாட்கள் சாப்பிட மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும். பொதுவாக புடலங்காயில் தண்ணீர் சத்து அதிகமாக உள்ளதால் சிறிதளவு சாப்பிட்டவுடன் வயிறு நிறையும்.

எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும். அதிக உடல் சூட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து 300மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுக்குள்வரும். இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால்  இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.

புடலங்காய், நீண்ட ஆயுளை தரும் காய். புடலங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் வாயிலாக, உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். அதிகம் நீர் சத்துள்ள இக்காயில், நோய்களை போக்கும் மருத்துவ குணம் உள்ளது. புடலங்காய் சர்க்கரை நோய் மற்றும் வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற, மருந்தாக பயன்படுகிறது.

புடலங்காய் (100 கிராம் அளவில்)
ஆற்றல் 86.2 கிலோ கலோரி
கொழுப்பு  3.9 கிராம்
சோடியம 33 மி.கி.
பொட்டாசியம் 359.1 மி.கி.
நார்ச்சத்து 0.6 கிராம்
புரதம் 2 கிராம்
வைட்டமின் ஏ 9.8 %
வைட்டமின் பி6 11.3 %
வைட்டமின் சி 30.6%
கால்சியம் 5.1 %
இரும்புச்சத்து 5.7%

புடலின் வேரை கைப்பிடி எடுத்து மைய அரைத்து சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.
புடலங்காயை பொறியல் செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு  உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்துவர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும். கடும் காய்ச்சல் உள்ளவர்கள் வெட்டிய புடலங்காய் 250கிராம் எடுத்து 300மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 200மிலி குடித்தால் ஒரே நாளில் காய்ச்சல் இயற்கையாக நீங்கும். புழுவெட்டு உள்ளவர்கள் பொடுகு தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் புடலங்கொடியின் இலையை அரைத்து தலையில் தடவிவர புழுவெட்டு மறையும். தொடர்ந்து காயை உணவாக சாப்பிட்டுவர பொடுகு நீங்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளை படுதலை குணமாக்க புடலங்காயை குழம்பு வைத்து சாப்பிட கருப்பை கோளாறுகள் நீங்கும். மிகவும் மெலிந்த உடல் கொண்டவர்கள் சூட்டு உடம்புக்காரர்கள் அடிக்கடி புடலங்காயை சாப்பாட்டில் சேர்த்து வர உடல் மெலிவு மாறி உடல் பருமனடையும். குடல்புண் உள்ளவர்களுக்கு அடிக்கடி வாயில் புண்ஏற்படும். இவர்கள் வாரம் ஒரு முறை புடலங்காயை எந்த வகையிலாவது உணவில் சேர்த்து கொண்டு வந்தால் வாய்ப்புண் குடல் புண், தொண்டை புண் ஆறும். உணவு செரிக்காமல்  இருப்பவர்கள் புடலங்காயை கூட்டு செய்து சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். இத்தகைய சிறப்பு கொண்ட புடலையை அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. சாப்பிட்டால் சொறிசிரங்கு கரப்பான் நோய்கள் ஏற்படும். இதைத்தான் என்கின்றார் அகத்தியர். உணவுக்கு மட்டுமே பயன்படும் என்ற புடலங்காயை ஆராய்ந்து அதன் மருத்துவ குணங்களை அளித்தனர் நமது முன்னோர்கள். உணவே மருந்து என்ற முறையில் அளவறிந்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.